Categories

Friday 25 January 2019

அணிலாடும் முன்றில் அல்லோலப்படுது மண்ணில்


சும்மா ஒரு பதிவு. இன்னைக்கு அலுவலத்துல வழக்கம்போல மாலை தேநீர் குடிக்கப் போனேன். அணில் குஞ்சு ஒன்னு அலுவல வாகனங்கள் வெளிய போற வழில இறங்கி சாலைக்கு குறுக்க கீச்சு கீச்சுன்னு கத்திகிட்டு ஓடுது.

அது அலுவலக வளாகத்துக்குள்ள இருக்குற சாலை. அந்த அணில் குஞ்சு நடுவுல போய் நின்னுகிச்சு. வண்டிகள் ஏத்திட வாய்ப்பதிகம். அதனால நானும் அணைவாப் போய் நின்னேன். வண்டிகள் குறைஞ்சப்ப ஓரமா போறதுக்கு தள்ளிவிட்டேன். அதுவும் நேரா போய் ஓரமா நின்னுடுச்சு. சரி போகலாம்ன்னு பாத்தா, அதுக்கு நடைபாதையை ஏறத் தெரியல. சரி... அதுவா எப்படியாவது ஏறிக்கட்டும்ன்னு நகந்தேன். இது போடுற சத்தத்துல அப்போ நடைபாதைல போன நாய் ஒன்னு இதை நோக்கி வந்துருச்சு...

இது என்னடா காத்திருந்தவன் பொண்டாட்டிய, நேத்து வந்தவன் தூக்கிட்டுப் போன கதையாப் போச்சுன்னு, போற போக்குல அந்த நாயை ‘ச்சூ’ன்னு சொன்னா, அது லேசா போக்கு காட்டிட்டு திரும்ப வருது. திரும்பவும் பெட்டைக் கோழி அடை காத்தா மாதிரி அந்த அணிலுக்கு அணைவா நிக்குறேன். அது ஏறுறபாட்டக் காணோம்.

உத்துப் பாத்தா தான் தெரியுது இந்த அணில் பக்கி, மழை நீர் வடிகால் கம்பில வேற மாட்டிக்கிடக்கு. சரி ஒரு சில்லுச் செங்கலை வச்சா அது ஏறிப் போகுதாப் பாப்போம்ன்னு கல் எடுக்கா எட்டிப் போனா, இந்த நாய் அண்ட வருது. இதென்னடா மதுரக்கு வந்த சோதனைன்னு நாய்க்குப் போக்கு காட்டுனா போகல.

எம்புட்டு நேரம் தான் நிக்குறது. வேல வேற கிடக்கு.டீக் குடிக்க வேற தொண்டத் தண்ணி ஏங்குது. நாயும் போற மாதிரி இல்ல. சரி அடிச்சு விரட்டலாம்னா. ஐடி கம்பேனில நாய் கடிபட்டு ஆம்புலன்ஸ் போற முதல் ஆள் நாமளா தான் இருப்போம்ன்னு பயந்து வருது. சரி, கடவுள் விட்ட வழி.

நாய்க்கு இன்னைக்கு அணில் கறி போலன்னு டீக் கடை வழில நகண்டேன். நாயும் அந்த பக்கம் தான் நிக்குது. அதுவும் அங்குட்டு ஒரு அடி நகருது. ஆகா ஒரு அடிமை சிக்குருச்சுடா படித்துறை பாண்டின்னு விறு விறுன்னு நடக்குறேன். நாயும் கொஞ்சம் நடந்து, பின்ன ஓடிருச்சு. 

அடடா, இம்புட்டு நேரமும் அணில் பக்கத்துல நின்னு நேரத்தை கடத்திட்டோமே, முதல்ல நாயை விரட்டி இருக்கலாமேன்னு தோனுச்சு. திரும்ப வந்து அணிலை நடைபாதை செடிகளுக்குள்ள விட்டேன். அடுத்து, அதுக்கு மரம் ஏறத் தெரியல. அடப்போ கழுத(அணில் தான்)ன்னு கிளம்பிட்டேன்

தேநீர் அடிச்சுட்டு வந்து பாத்தா, ஒரு பாதுகாவலர் அதைத் தூக்கிட்டு அதோட கூட்டைத் தேடி அலையுறார். திரும்பவும் சாலைக்கு வந்துருக்கு கொதக்கு.... ‘கூடு கிடைக்கலைனா, ஏதாவது மரத்துல விடுங்க. நாய் கவ்விடும்’ன்னு அவர்ட்ட சொல்லிட்டு வந்தேன். 

No comments:

Post a Comment